செய்திகள்
வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பன்ட்

ரிஷப் பன்ட், வாஷிங்டன் சுந்தர் அபார ஆட்டம்- 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 294/7

Published On 2021-03-05 12:23 GMT   |   Update On 2021-03-05 12:23 GMT
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியைவிட இந்தியா 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
அகமதாபாத்:

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 205 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 3 விக்கெட் எடுத்தார்.,

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் சேர்த்திருந்தது. 

இந்நிலையில் இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. கேப்டன் கோலி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 49 ரன்கள், புஜாரா 17 ரன்கள், ரகானே 27 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதேசமயம், ரிஷப் பன்ட்-வாஷிங்டன் சுந்தர் ஜோடி, இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தது. ரிஷப் பன்ட் சதம் அடித்தார். அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் அரை சதம் கடந்தார். 

இதன்மூலம் இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழந்து 294 ரன்கள் சேர்த்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியைவிட இந்தியா 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 
Tags:    

Similar News