செய்திகள்
அஸ்வின்

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு அஸ்வின் உள்பட 3 பேர் போட்டி

Published On 2021-03-04 20:15 GMT   |   Update On 2021-03-04 20:15 GMT
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் முறையை ஐ.சி.சி சமீபத்தில் அறிமுகம் செய்தது.
துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீசின் கைல் மேயர்ஸ் ஆகியோரை இறுதி செய்து ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், ஒரு சதம் உள்பட 176 ரன்களும் எடுத்து பிரமாதப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கடந்த மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்டில் ஆடி இரட்டை சதம் உள்பட 333 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் கைல் மேயர்ஸ் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகி 2-வது இன்னிங்சில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.

இவர்களில் இருந்து சிறந்த வீரரை ஐ.சி.சி.யின் வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்கள் இணையம் வழியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள்.

சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் டாமி பீமோன்ட், நாட் ஸ்சிவர் (இங்கிலாந்து), புரூக் ஹாலிடே (நியூசிலாந்து) ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News