செய்திகள்
ரோகித் சர்மா, விராட் கோலி

இது தொடர்பாக கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர் சொல்கிறார்

Published On 2020-06-05 10:06 GMT   |   Update On 2020-06-05 10:06 GMT
கேப்டன் பதவி தொடர்பாக கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை என முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக உள்ளார். விராட் கோலியின் சுமையை குறைக்கும் வகையில் 20 ஓவர் போட்டிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்று முன்னாள் வீரர் அதுல் வாசன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசிர் உசேன் கூறும்போது, கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க கோலி விரும்பமாட்டார் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் கேப்டன் பதவி தொடர்பாக விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே போட்டியில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலின்போது அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவருமே மிகவும் சிறப்பான வீரர்கள். போட்டி அன்று நன்றாக அமைந்துவிட்டால் இருவருமே அபாரமாக ஆடி அணியை வெற்றிபெற வைப்பவர்கள்.

எனக்குத் தெரிந்தவரை இருவருக்கும் இடையே எந்தவிதமான போட்டியும் இல்லை. அவர்கள் இருவரும் தங்களது பொறுப்புகளில் கவனமாகவும், சிறப்பாகவும் தெளிவுடனும் பணியாற்றி வருகிறார்கள்.

தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு தாமதமாகவே கிடைத்தது. 2013-க்கு பிறகே அவர் தொடக்க வரிசையில் ஆடினார். அதற்கு முன்பு வரை 5,6, 7-வது பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டார்.

வெளிநாட்டு ஆடுகளத்தில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்டார். பந்தை யூகிப்பதில் தடுமாறினார். ஆனால் தற்போது மிகச்சிறந்த வீரராக உருவாகி இருக்கிறார்.

இவ்வாறு சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News