செய்திகள்
ஹர்பஜன் சிங்

ஒருநாள் கிரிக்கெட் விதிமுறையில் மாற்றம்: ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் ஆதரவு

Published On 2020-05-14 08:48 GMT   |   Update On 2020-05-14 08:48 GMT
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் விதிமுறையில் மாற்றம் தேவை என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியதை சச்சின் தெண்டுல்கர் ஆமோதித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது புதிய விதிப்படி ஒரு ஆட்டத்தில் இரண்டு புதிய வெள்ளைப் பந்துகளைப் பயன்படுத்தலாம். அதேபோல் 3 பவர் பிளேக்களைப் பின்பற்ற வேண்டும். முதல் பவர் பிளேவில் வெளிவட்டத்தில் 2 பீல்டர்கள் மட்டுமே இருக்கலாம். 11-40 ஓவர்கள் வரை 4 வீரர்கள் மட்டுமே இருக்கலாம். கடைசி 10 ஓவர்களில் 5 பீல்டர்கள் மட்டுமே இருக்கலாம்.

கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர் - கங்குலி விளையாடிய காலக்கட்டத்தில் இந்த விதிமுறைகள் இல்லை. இதற்கிடையே தெண்டுல்கர் - கங்குலி தொடக்க ஜோடிதான் இதுவரை அதிகம் ரன்களை சேர்த்தது என்ற தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.

இருவரும் இணைந்து 176 போட்டியில் 8227 ரன்களை எடுத்தனர். சராசரி 47.55 ஆகும். ஒருநாள் போட்டியில் வேறு எந்த ஜோடியும 6000 ரன்களைக் கூட கடந்தது இல்லை. ஐ.சி.சி.யின் இந்த பதிவைப் பார்த்து, தெண்டுல்கர் புதிய விதிகள் இருந்திருந்தால், இன்னும் எவ்வளவு ரன்கள் எடுத்திருப்போம் என்று கங்குலியிடம் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த கங்குலி இன்னும் 4000 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

தெண்டுல்கர் - கங்குலி உரையாடலுக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் பதிலளித்திருந்தார். அவர் கூறியதாவது:-

நீங்கள் இருவரும் இன்னும் கூடுதலாக சில ஆயிரம் ரன்களை எடுத்திருக்கலாம். இது ஒரு மோசமான விதி. அப்போது 260 மற்றும் 270 ரன்கள் எடுத்தாலே கடும் போட்டி நிலவும். ஆனால் தற்போது 320, 330 ரன்கள் எடுத்தாலும் சுலபமாக அதை தாண்டி விடுகிறார்கள்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த சச்சின் தெண்டுல்கர் ‘‘ஹர்பஜன் சிங் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளும் மற்றும் ஆடுகளமும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதை ஆய்வு செய்வது அவசியமானது’’எனக் கூறினார்.

தெண்டுல்கர் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளை மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News