செய்திகள்
சிறந்த உலக கோப்பை லெவன் அணியில் சச்சின், இம்ரான் கானுக்கு இடம் கொடுக்காத அப்ரிடி
கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத இரண்டு ஜாம்பவான்களுக்கு பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி இடம் கொடுக்க மறுத்துள்ளார்.
பாகிஸ்தான் அணி கடந்த 1992-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. அப்போது இம்ரான் கான் அந்த அணிக்கு கேப்டனாக இருந்தார். இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஆறு உலக கோப்பையில் விளையாடியுள்ளார்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை இந்தியா வென்றது. அந்த அணியில் சச்சின் தெண்டுல்கர் இடம் பிடித்திருந்தார். உலக கோப்பையில் 2278 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஆசிய கிரிக்கெட்டை இருவரையும் தவிர்த்து பேசிவிட முடியாது. ஆனால் பாகிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஷாஹித் அப்ரிடி, எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த உலக லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் இருவருக்கும் அவர் இடம் கொடுக்கவில்லை.
சயீத் அன்வர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு தொடக்க பேட்ஸ்மேன் இடத்தை வழங்கியுள்ளார். கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியா 199, 2003 மற்றும் 2007 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தவர். பாகிஸ்தான் அணியில் சயீத் அன்வர் இடம் பிடித்திருந்தார்.
இரண்டு முறை உலக கோப்பையை கையில் ஏந்திய ரிக்கி பாண்டிங்கை 3-வது இடத்திற்கு தேர்வு செய்துள்ளார். இவர் மூன்று முறை உலக கோப்பை அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். 2003 மற்றும் 2007-ல் கோப்பையை வென்றுள்ளார்.
விராட் கோலி மற்றும் இன்சமாம் உல் ஹக் ஆகியோரை அடுத்த இரண்டு இடத்திற்கு தேர்வு செய்துள்ளார். தென்ஆப்பிரிக்காவின் ஜேக்யூஸ் கல்லீஸை ஆல்-ரவுண்டராக தேர்வு செய்துள்ளார். இம்ரான் கானுக்குப் பதிலாக அவரை தேர்வு செய்துள்ளார். கல்லீஸ் 199, 1999, 2003,2007,2011 உலக கோப்பையில் விளையாடியுள்ளார்.
வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், சோயிப் அக்தர் ஆகியோரை வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ளார். ஷேன் வார்னே மற்றும் சக்லைன் முஷ்டாக் ஆகியோரை சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ளார்.