செய்திகள்
வாசிம் அக்ரம்

அவர்களை பிரபலப்படுத்த என் பெயரை பயன்படுத்துகிறார்கள்: வாசிம் அக்ரம் சாடல்

Published On 2020-05-08 10:38 GMT   |   Update On 2020-05-08 10:38 GMT
பாகிஸ்தான் மூன்று உலக கோப்பையை இழக்க வாசிம் அக்ரம்தான் காரணம் என அமிர் சோஹைல் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அக்ரம் பதிலடி கொடுத்துள்ளார்.
வாசிம் அக்ரம் குறித்து அமிர் சோஹைல் ‘‘இது மிகவும் எளிது. ஒருபக்கம் 1992 உலக கோப்பையை வைத்துவிட்டு, 1996-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை பற்றி பேசலாம். 1995-ல் ரமீஸ் ராஜா கேப்டனாக இருந்தார். அதற்கு முன் சலீம் மாலிக் கேப்டனாக இருந்தார். அவர் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்தார். அவர் இன்னும் ஒரு வருடம் கேப்டனாக இருந்திருந்தால் வாசிம் அக்ரமால் கேப்டனாகியிருக்க முடியாது.

2003 வரை என்ன நடந்தது என்று நீங்கள் உற்று நோக்கினால், ஒவ்வொரு உலக கோப்பைக்கும் முன் கேப்டன்கள் நீக்கப்பட்டிருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதில் வாசிம் அக்ரம் முக்கிய பங்காற்றியிருப்பார்.

பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்த வாசிம் அக்ரம், 1992-ம் ஆண்டுக்குப்பின் உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லாமல் இருப்பதை உருவாக்கினார். அக்ரம் பாகிஸ்தானுக்காக நேர்மையாக இருந்திருந்தால், 1996, 1999 மற்றும் 2003 உலக கோப்பைகளை வென்றிருக்கலாம்.

இந்த காரணத்திற்காகத்தான் அனைத்து நாடகமும் நடந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இதற்கெல்லாம் பின்னால் உள்ள குற்றவாளியை முன்னணியில் கொண்டு வரவேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர்களை பிரபலப்படுத்த என் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று வாசிம் அக்ரம் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘என்னைப்பற்றி இப்படி எதிர்மறையாக விஷயங்களை கேட்கும்போதெல்லாம் மிகவும் கவலையாக உள்ளது. ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் ஆன பின்பும், சில வீரர்கள் அவர்களை பிரபலப்படுத்துவதற்காக என்னுடைய பெயரை பயன்படுத்துகிறார்கள்.

அவர்களை பற்றி என்னாலும் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்க முடியும். அது என்ன நோக்கத்திற்கு உதவும். அதனால்தான் நான் அமைதியாக இருக்கிறேன். ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் ஆனப்பிறகு கூட நான், பெற்ற மரியாதை மற்றும் ரசிகர்களிடம் இருந்து கிடைத்த அன்பு ஆகியவற்றை பற்றி சிந்திக்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News