செய்திகள்
இந்தியாவில் தவித்து வந்த நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் சொந்த நாடு திரும்பினார்
ஐபிஎல் போட்டிக்கு தயாராகுவதற்காக இந்தியா வந்திருந்த நியூசிலாந்து முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குனருமான மைக் ஹெசன் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்த அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தவர் மைக் ஹெசன். இவர் ஐபிஎல் அணியான ஆர்சிபி, அந்த அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குனராக இவரை நியமித்துள்ளது.
மார்ச் மாதம் 29-ந்தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதாக இருந்ததால் மார்ச் 5-ந்தேதி மைக் ஹெசன் இந்தியா வந்தார். ஐபிஎல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் நியூசிலாந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சொந்த நாடு திரும்ப இந்தியாவில் உள்ள நியூசிலாந்து நாட்டிற்கான தூதரகத்தை நாடினார். அவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்க சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு நியூசிலாந்து விமானம் மூலம் இன்று சொந்த நாடு சென்றடைந்தார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மைக் ஹெசன் ‘‘மும்பை விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் பஸ்சில் ஒருநாளுக்கு மேல் சிக்கி தவித்தேன். அதன்பிறது தற்போது அருமையாக காட்சிகளை பார்க்கிறேன். ஏர் நியூசிலாந்து ஸ்டாஃப்கள் நாங்கள் சொந்த நாடு திரும்ப அற்புதமாக செயல்பட்டார்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்திய பிரதமர் மோடி, நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா, இந்தியாவில் உள்ள நியூசிலாந்து தூதரகம், நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரிகள் ஆகியோரிக்கு நன்று தெரிவித்துள்ளார்.