செய்திகள்
வனாட்டு தீவில் கிரிக்கெட்

உலகமே முடங்கிக் கிடங்கும் நேரத்தில் கெத்தாக கிரிக்கெட் போட்டியை நடத்திய குட்டித்தீவு

Published On 2020-04-27 14:54 IST   |   Update On 2020-04-27 14:54:00 IST
உலகமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து முடங்கியுள்ள நிலையில், தெற்கு பசிபிக் கடலில் உள்ள குட்டித்தீவு கிரிக்கெட் போட்டியை நடத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளில் உள்ள விளையாட்டு போட்டிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் என அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள, அமெரிக்காவில் பேஸ்பால் நடைபெறவில்லை.

ஆனால் ஒரு குட்டித்தீவு கிரிக்கெட் போட்டியை நடத்தி லைவ் ஸ்ட்ரீம் மூலம் ஒளிபரப்பி அசத்தியுள்ளது. தெற்கு பசிபிக் கடலில் உள்ள குட்டித்தீவு வனாட்டு. இந்த தீவில் நான்கு அணிகள் பங்கேற்ற பெண்களுக்கான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ‘ப்ளூ புல்ஸ்’ அணி வெற்றி பெற்றது.

மேலும், ஆண்களுக்கான 10 ஓவர்கள் கொண்ட கண்காட்சி போட்டியையும் நடத்தி அசத்தியுள்ளன. இந்த போட்டிகளை 3 லட்சத்து 50 ஆயிரம் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

கிரிக்கெட் போட்டிகள் வனாட்டு தீவின் தலைநகரான போர்ட் விலாவில் நடைபெற்றன. அந்த நாட்டின் ஒளிபரப்பு நிறுவனமான விபிடிசி (VBTC) நான்கு கேமராக்கள் மூலம் போட்டியை முதன்முறையாக நேரடியாக ஒளிபரப்பியது. அத்துடன் வர்ணனையுடன் பேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்தது.

3 லட்சம் மக்கள் தொகை கொண்ட வனாட்டு தீவில் முன்னெச்சரிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News