செய்திகள்
U-17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை

இந்தியாவில் நடக்கவிருந்த U-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு

Published On 2020-04-04 03:29 GMT   |   Update On 2020-04-04 03:29 GMT
கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்குட்பட்ட மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்டிருந்தது. இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் போட்டியை திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என நிர்வாகக்குழுவுக்கு தொடர்ந்து பரிந்துரை செய்யப்பட்டது.  இதனையடுத்து போட்டியை ஒத்திவைப்பதாக பிபா அறிவித்துள்ளது. போட்டிக்கான புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.



கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவுகளை எதிர்கொள்வதற்காக சமீபத்தில் பிபா கவுன்சிலால் நிறுவப்பட்ட  பிபா-கூட்டமைப்பு செயற்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உலக கோப்பை போட்டியை ஒத்திவைக்கும்படி முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் நடைபெறவிருந்த சர்வதேச போட்டிகள் (ஜூன் 2020 வரை) மற்றும் யு-17 மற்றும் யு-20 மகளிர் உலகக் கோப்பை உள்ளிட்ட அனைத்து பிபா போட்டிகளையும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2022 உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை குறித்து, கூட்டமைப்புகளுடன் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News