செய்திகள்
இர்பான் பதான்

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இர்பான் பதான்

Published On 2020-01-04 18:45 IST   |   Update On 2020-01-04 20:54:00 IST
இந்திய வீரர் இர்பான் பதான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக விளங்கியவர் இர்பான் பதான். இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 29 டெஸ்ட் (100 விக்கெட்), 120 ஒருநாள் (173 விக்கெட்), 24 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாறு படைத்தவர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் ஓவரின் கடைசி மூன்று பந்தில் சல்மான் பட், யூனிஸ் கான், முகமது யூசுப் என மூன்று பேரையும் அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனையை அரங்கேற்றினார். தனது அசத்தல் சுவிங் பவுலிங்கால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமுடன் ஒப்பிடப்பட்டார்.

2007-ல் இந்திய அணி டி-20 உலகக்கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தவர் இர்பான் பதான். இறுதிப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி  16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இர்பான் பதான் இன்று அறிவித்துள்ளார்.

கடந்த 2012-ல் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இர்பான் பதான் கடைசியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Similar News