செய்திகள்
விக்கெட் வீழ்த்திய அஷ்வினை பாராட்டும் சக வீரர்கள்

ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு 96 ரன்னில் சுருண்டது - 2ம் நாள் முடிவில் இமாசல பிரதேசம் 195 ரன் முன்னிலை

Published On 2019-12-18 13:10 GMT   |   Update On 2019-12-18 13:10 GMT
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 2வது சுற்றில் தமிழ்நாடு அணியை முதல் இன்னிங்சில் 96 ரன்னில் சுருட்டிய இமாசல பிரதேசம், 2ம் நாள் ஆட்ட முடிவில் 195 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
திண்டுக்கல்:
 
ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் இரண்டாவது சுற்று ஆட்டம் நேற்று தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - இமாசல பிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, இமாசல பிரதேசம் அணி முதலில் களமிறங்கியது. சிறப்பாக பந்து வீசிய தமிழ்நாடு அணி இமாசல் அணி வீரர்களை வெளியேற்றினர். இமாசல பிரதேசம் அணியின் ஆகாஷ் வசிஷ்ட் மற்றும் மயங்க் தகார் ஓரளவு தாக்குப்பிடித்தனர். 

இறுதியில் இமாசல பிரதேசம் அணி 71.4 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆகாஷ் வசிஷ்ட் 35 ரன்களும், மயங்க் தகார் 33 ரன்களும், சுமித் வர்மா 30 ரன்களும் எடுத்தனர்.

தமிழ்நாடு சார்பில் ரவிசந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தமிழ்நாடு அணி களமிறங்கியது. இரண்டாவது நாளில் இமாசல் அணியினர் துல்லியமாக பந்து வீசினர். இதனால் தமிழ்நாடு அணி 39 ஓவரில் 96 ரன்னில் சுருண்டது.

இமாசல் அணி சார்பில் வைபவ் அரோரா 3 விக்கெட், மயங்க தகார், ரிஷி தவான் மற்றும் ஆகாஷ் வசிஷ்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 62 ரன்கள் முன்னிலையுடன் இமாசல பிரதேசம் அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இரண்டாவது இன்னிங்சிலும் இமாசல் வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இதனால், இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இமாசல பிரதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அணியை விட 195 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

தமிழ்நாடு அணி சார்பில் நடராஜன், அஷ்வின் மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
Tags:    

Similar News