செய்திகள்
மனு பாக்கர்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்- இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்றார்

Published On 2019-11-21 04:36 GMT   |   Update On 2019-11-21 04:36 GMT
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
புடியான் (சீனா):

சீனாவின் புடியான் நகரில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (வயது 17), இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். 

இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். 



செர்பிய வீராங்கனை அருணோவிக் சோரனா வெள்ளிப்பதக்கமும், சீனாவின் வாங் கியான் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற மற்றொரு இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி தேஸ்வால் 6-ம் இடத்தைப் பிடித்தார்.

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஜூனியர் ஒலிம்பிக் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் மனு பாக்கர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

இந்த தொடர் வெற்றிகளின் மூலம், டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதையும் உறுதி செய்துள்ளார் மனு பாக்கர்.
Tags:    

Similar News