செய்திகள்
ரோகித் சர்மா

வங்காளதேசத்துக்கு இந்தியா பதிலடி- சுழற்பந்து வீரர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு

Published On 2019-11-08 06:02 GMT   |   Update On 2019-11-08 06:02 GMT
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதால் சுழற்பந்து வீரர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராஜ்கோட்:

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய வங்காளதேசம் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்னே எடுக்க முடிந்தது.

முகமது நயிம் 31 பந்தில் 36 ரன்னும் (5 பவுண்டரி), சவுமியா சர்க்கார் 20 பந்தில் 30 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் மகமதுல்லா 21 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

யசுவேந்தர சாஹல் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

154 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி ஆடியது.

கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்த இலக்கை 26 பந்து எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 43 பந்தில் 85 ரன் எடுத்தார். இதில் 6 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். தவான் 27 பந்தில் 31 ரன்னும் ( 4 பவுண்டரி), ஷிரேயாஸ் அய்யர் 13 பந்தில் 24 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

சுழற்பந்து வீரர்களான யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் மிகவும் அபாரமாக பந்து வீசினார்கள். எப்படி வீச வேண்டும் என்பதை புரிந்து வீசியதுதான் முக்கியமானது. சாஹல் கடந்த ஒரு ஆண்டாகவே மிகவும் நேர்த்தியுடன் பந்து வீசி வருகிறார். நெருக்கடி நிலையில் எங்களுக்கு நம்பிக்கை அளிப்பவர்.

வாஷிங்டன் சுந்தர் எங்கள் அணியின் தொடக்க பவுலர் ஆவார். ஆனால் இந்த ஆட்டத்தில் 3 ஓவருக்கு பிறகுதான் அவரை கொண்டு வந்தேன்.

பீல்டிங்கில் சொதப்பியதால் தான் சற்று உணர்ச்சி வசப்பட்டேன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எனது பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் எப்போதுமே கவனமாக இருப்பேன்.

ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருப்பதை அறிந்து இருந்தேன். மேலும் 2-வது இன்னிங்சில் ஈரப்பதம் இருந்ததால் பந்து வீசுவது கடினமானது. இந்த சாதகங்களை அறிந்து நான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். பவர்பிளேயை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

அதே நேரத்தில் வங்காளதேச பந்து வீச்சாளர்களை குறைத்து மதிப்பிடவில்லை. இந்த ஆண்டு எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது.

இவ்வாறு ரோகித்சர்மா கூறினார்.

தோல்வி குறித்து வங்காள தேச கேப்டன் மகமதுல்லா கூறியதாவது:-

பேட்டிங்குக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் நாங்கள் 25 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். இந்திய அணியின் சுழற்பந்து வீரர்கள் நேர்த்தியாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர்.

ரோகித்சர்மா- தவான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்து விட்டது. அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 10-ந் தேதி நாக்பூரில் நடக்கிறது.

Tags:    

Similar News