சென்னையில் ஜனவரி 5-ந்தேதி மராத்தான் ஓட்டப்பந்தயம்
சென்னை:
சென்னை ரன்னர்ஸ் அமைப்பு 2006-ம் ஆண்டில் இருந்து சென்னையில் ஆண்டுதோறும் மராத்தான் போட்டியை நடத்தி வருகிறது.
8-வது சென்னை மராத்தான் பந்தயம் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 5-ந் தேதி நடக்கிறது. ஸ்கெச்சர்ஸ் நிறுவனம் இதற்கு ஸ்பான்சர் செய்கிறது.
இந்த போட்டி 4 பிரிவாக நடத்தப்படுகிறது. முழு மராத்தான் (42.195 கிலோமீட்டர்). பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ.), அரை மராத்தான் (21.097 கி.மீ.) மற்றும் 10 மீட்டர் ஓட்டம் ஆகியவை ஆண்கள், பெண்களுக்கு நடக்கிறது.
இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.25 லட்சமாகும். மராத்தான் பந்தயம் அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
இதுகுறித்து போட்டி அமைப்புக்குழு இயக்குனர் செந்தில்குமார் கூறும் போது, “சென்னை மராத்தான் பந்தயம் இந்தியாவில் நடைபெறும் சிறந்த ஓட்டமாகும். இந்தப் போட்டிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.