செய்திகள்
கேஷவ் மகராஜ்

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிப்பேன் - தென் ஆப்பிரிக்கா வீரர் சொல்கிறார்

Published On 2019-10-01 05:26 GMT   |   Update On 2019-10-01 05:26 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிப்பேன் என்று தென்ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம்:

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதனை அடுத்து இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான 29 வயது கேஷவ் மகராஜ் விசாகப்பட்டினத்தில் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வித்தியாசமான முறையில் பந்து வீசி திணறடிக்கக்கூடியவர். ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக பந்து வீசி எதிரணியினருக்கு நெருக்கடி கொடுப்பவர். நிலையாக பந்து வீசுவதன் மூலம் தான் பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுக்க முடியும். அஸ்வின், ஜடேஜா செயல்படுவது போல் நானும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஒருமுனையில் இருந்து நிலையாக பந்து வீச வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்தியாவில் நான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டி தொடர் இதுவாகும். இந்திய துணை கண்டத்தில் உள்ள ஆடுகளங்களில் பந்து நன்கு சுழலும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தான் அணியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர்களது சொந்த மண்ணில் பந்து வீசுவது என்பது சிறந்த அணிக்கு எதிராக உங்கள் பந்து வீச்சை சோதிப்பதாகும். இந்த போட்டி தொடர் எனது பந்து வீச்சு எப்படி இருக்கிறது என்பதை உணர்த்துவதாக அமையும் என்று நினைக்கிறேன்.

இந்த போட்டி தொடரில் சுழற்பந்து வீச்சு போல் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பந்து வீச்சும் முக்கிய பங்கு வகிக்கும். எல்லா அணிகளும் உலகின் எல்லா இடங்களிலும் தங்களிடம் இருந்தால் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பந்து வீச்சை பயன்படுத்தவே விரும்பும். இந்திய அணியில் முகமது ஷமி உள்ளிட்ட வலுவான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பந்து வீச்சு எடுபட்டால் அந்த மாதிரி பந்து வீசும் திறன் படைத்த வீரர்கள் எங்கள் அணியிலும் உள்ளனர். ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்தக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இந்த போட்டி தொடரில் விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அதேநேரத்தில் இந்திய அணியில் அவரது இடத்தை நிரப்பக்கூடிய பவுலர்கள் போதிய அளவில் உள்ளனர். உமேஷ் யாதவ் மற்றொரு உலக தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்.

எங்களது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவது அவசியமானதாகும். இந்திய சூழ்நிலையை எப்படி சமாளித்து நின்று ஆடுவது என்பது குறித்து கவனம் செலுத்தி பயிற்சி எடுத்து இருக்கிறோம். எங்கள் அணியில் புதிய வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். கடந்த காலங்களில் நாங்கள் சந்தித்த தோல்வியை பற்றி நினைத்து பார்க்காமல் இந்திய அணிக்கு சவால் அளிப்பதில் முழு கவனத்தையும் செலுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News