செய்திகள்

என்னிடம் என்ன தவறு இருக்கிறது?: ஏலம் போகாத விரக்தியில் மனோஜ் திவாரி கேள்வி

Published On 2018-12-19 09:43 GMT   |   Update On 2018-12-19 09:43 GMT
என்னிடம் என்ன தவறு இருக்கிறது, எதற்காக என்னை எடுக்கவில்லை என்று மேற்கு வங்க வீரர் மனோஜ் திவாரி ட்விட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். #IPLAuction2019
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடியவர் மனோஜ் திவாரி. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர், இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் தலா ஒரு சதம், அரைசதத்துடன் 287 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதுவரை 11 ஐபிஎல் தொடரில் 10-ல் பங்கேற்று பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய மனோஜ் திவாரி 15 போட்டிகளில் விளையாடி 300 ரன்கள் வரை குவித்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த மனோஜ் திவாரி இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. இதனால் விரக்தியடைந்த மனோஜ் திவாரி ட்விட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து மனோஜ் திவாரி ட்விட்டரில் ‘‘எனது நாட்டிற்காக ஒருநாள் போட்டியில் களம் இறங்கி சதம் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றேன். அதன்பின் 14 போட்டியில் என்னை அணியில் சேர்க்கவில்லை. சதம் அடித்தபின் பெரிய இடைவெளி ஏற்பட்டதற்கு நான் என்ன தவறு செய்தேன் என்பது தெரியவில்லை.


கடந்த 2017-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் நான் பெற்ற விருதுகளைப் பாருங்கள். அதன்பின்பும் என்னை அணியில் சேர்க்கவில்லை. என்னிடம் என்ன தவறு இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது'' என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News