இந்தியா

1½ வயது குழந்தையை கொன்று கால்வாயில் வீசிய இளம்பெண்

Published On 2023-04-07 07:19 GMT   |   Update On 2023-04-07 07:19 GMT
  • அனுஷா தொட்டிலில் 2 கரடி பொம்மைகளை வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தூங்கினார்.
  • அனுஷாவின் நடத்தையில் மாற்றங்களை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், குற்றால மடுகு பகுதியை சேர்ந்தவர் மனைவி அனுஷா. தம்பதிக்கு கிருத்திகா என்ற 4 வயது மகளும், லட்சுமி ஹாரிகா என்ற 18 மாத குழந்தையும் இருந்தனர். மணிகண்டன் ராய்ப்பூரில் ஓட்டல் நடத்தி கொண்டு அங்கேயே தங்கி உள்ளார்.

அனுஷா தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்து நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கணவர் ஓட்டல் நடத்தி வருவதால் அவமானமாக கருதிய அனுஷா கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, ஐதராபாத் சென்று நல்ல சம்பளத்தில் வேலை செய்யும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என எண்ணினார். இதனால் தனது மூத்த மகள் கிருத்திகாவை கணவரிடம் ஒப்படைத்து விட்டார். 1½ வயது குழந்தையை என்ன செய்வது என்று யோசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி நள்ளிரவு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். உடலை வீட்டின் பின்புறம் உள்ள கால்வாயில் வீசினார்.

பின்னர் அனுஷா தொட்டிலில் 2 கரடி பொம்மைகளை வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தூங்கினார்.

பொழுது விடிந்ததும் தூக்கத்தில் இருந்து எழுந்த அனுஷா தொட்டிலில் இருந்த குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் குழந்தைக்கு பதிலாக கரடி பொம்மைகளை வைத்து சென்றதாகவும் பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து நெல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அனுஷாவின் நடத்தையில் மாற்றங்களை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

முதலில் குழந்தை திருடு போனதாக போலீசாரிடம் தெரிவித்த அனுஷா பின்னர் போலீசார் அவர்களது பாணியில் விசாரித்தபோது குழந்தையை கொலை செய்து கால்வாயில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கால்வாயில் வீசப்பட்ட குழந்தை உடலை போலீசார் மீட்டனர். அனுஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News