இந்தியா

கர்ப்பிணி பெண் போலீசை சுவற்றில் அடித்து சித்ரவதை செய்த சப்-இன்ஸ்பெக்டர்

Published On 2022-10-06 05:16 GMT   |   Update On 2022-10-06 05:16 GMT
  • சுபானி மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து கருவை சிதைக்க முயன்றார்.
  • காதல் மனைவி என்ற ஈவு இரக்கம் பார்க்காமல் லட்சுமி பிரசன்னாவின் தலைமுடியைப் பிடித்து சுவற்றில் தலையை மோதியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

திருமலை:

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், போனகே பள்ளியை சேர்ந்தவர் சுபானி. இவர் நெல்லூர் டவுன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.

அதே போலீஸ் நிலையத்தில் நெல்லூர் அடுத்த பித்ர குண்டவை சேர்ந்த லட்சுமி பிரசன்னா பெண் போலீசாக வேலை செய்து வருகிறார்.

சப்-இன்ஸ்பெக்டர் சுபானி லட்சுமி பிரசன்னாவை காதலிப்பதாகவும், நீ இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது என ஆசைவார்த்தை கூறி மயக்கினார். இதை உண்மை என நம்பிய லட்சுமி பிரசன்னாவும் அவரை காதலிக்க தொடங்கினார்.

இதையடுத்து இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2 மாதங்கள் இன்பமாக ஓடிய தாம்பத்திய வாழ்க்கை அதன் பிறகு காதல் கசக்க ஆரம்பித்ததால் லட்சுமி பிரசன்னாவை சுபானி அடித்து துன்புறுத்த தொடங்கினார்.

சில மாதங்களில் கணவர் திருந்தி விடுவார் என எண்ணி அவரது கொடுமைகளை தாங்கிக் கொண்டு லட்சுமி பிரசன்னா அவருடன் குடும்பம் நடத்தினார்.

இந்த நிலையில் லட்சுமி பிரசன்னா கர்ப்பமானார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுபானி மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து கருவை சிதைக்க முயன்றார். மேலும் காதல் மனைவி என்ற ஈவு இரக்கம் பார்க்காமல் லட்சுமி பிரசன்னாவின் தலைமுடியைப் பிடித்து சுவற்றில் தலையை மோதியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதையடுத்து லட்சுமி பிரசன்னா அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் பிறகு இது குறித்து நெல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் லட்சுமி பிரசன்னாவை அலை கழித்தனர்.

இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் நெல்லூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுபானியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News