சாலையை கடக்க போக்குவரத்தை நிறுத்தி மலைப்பாம்புக்கு உதவிய வாலிபர்
- மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது.
- சில வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் பாம்புகளை கண்டால் துரத்தி அடிப்பவர்களுக்கு மத்தியில், ராட்சத மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க வாலிபர் ஒருவர் போக்குவரத்தை நிறுத்தி உதவிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியபிரதேச மாநிலத்தில் நர்மதா புரத்தில் நெடுஞ்சாலையில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. ஆனால் அந்த பாம்பு சாலையில் நகர முடியாமல் 10 நிமிடங்களுக்கு மேலாக திணறுவதை அவ்வழியாக சென்ற வாலிபர் பார்த்தார். உடனடியாக அவர் தனது வாகனத்தை நிறுத்தியதோடு பாம்பின் மீது மற்ற வாகனங்கள் ஏறி விடாமல் இருப்பதற்காக அந்த வழியில் போக்குவரத்தை நிறுத்தி உள்ளார்.
பின்னர் அந்த பாம்பு சாலையை கடக்கும் வகையில் கை தட்டி உள்ளார். அவரின் கை தட்டலை கேட்டு பாம்பு மெதுவாக சாலையை கடந்து செல்கிறது. இதை சில வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிய நிலையில் வாலிபரை பாராட்டி பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.