பாகுபலி பிரியாணியுடன் 30 வகையான உணவுகளை அரை மணி நேரத்தில் சாப்பிடும் போட்டி
- பாகுபலி பிரியாணி, சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் லெக் பீஸ், முட்டை, காலிபிளவர் பக்கோடா, சாதம் உள்ளிட்ட 30 வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டது.
- போட்டியில் கலந்து கொண்டவர்களால் அவ்வளவு உணவு வகைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடியாமல் திணறினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் பாகுபலி பிரியாணியுடன் 30 வகையான உணவு வகைகளை அரை மணி நேரத்தில் சாப்பிடுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தனர்.
இதனை கேள்விப்பட்டு ஆண்கள், பெண்கள் என உணவு பிரியர்கள் 3000 பேர் போட்டி போட்டுக்கொண்டு போட்டியில் பங்கேற்க ஓட்டல் முன்பு குவிந்தனர். ஓட்டலுக்குள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டு 30 வகையான சைவ, அசைவ உணவு வகைகள், 2 குடிநீர் பாட்டில்கள், குளிர்பானம் வைக்கப்பட்டது.
அதில் பாகுபலி பிரியாணி, சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் லெக் பீஸ், முட்டை, காலிபிளவர் பக்கோடா, சாதம் உள்ளிட்ட 30 வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்டவர்களால் அவ்வளவு உணவு வகைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடியாமல் திணறினர்.
ஒரு சிலர் அவசர கதியில் சாப்பிட்டதால் வாந்தி எடுத்தனர். சிலர் பாதியை சாப்பிட்டு விட்டு போட்டியில் இருந்து வெளியேறுவதாக கூறி சென்றனர். ஆனால் போட்டியில் கலந்து கொண்ட 2 பேர் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு காலி செய்தனர். இதனை பார்த்து போட்டி நடத்தியவர்கள் மலைத்துபோயினர். போட்டியில் வெற்றி பெற்ற 2 பேருக்கு ஓட்டல் நிர்வாகம் சார்பில் தலா ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. சாப்பாடு போட்டியில் பங்கேற்ற 3 ஆயிரம் பேரில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.