இந்தியா

பெங்களூருவில் 11-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2023-02-27 10:53 IST   |   Update On 2023-02-27 10:53:00 IST
  • தலையில் பலத்த காயமடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:

பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாளுக்கியா சர்க்கிளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு நேற்று ஒரு இளம்பெண் வந்தார். அவர் செல்போனில் பேசியபடியே குடியிருப்பில் வசிக்கும் நபரை பார்க்க வேண்டும் என்று காவலாளிடம் கூறினார்.

இதையடுத்து காவலாளியும் உள்ளே செல்ல அனுமதித்தார். இந்த நிலையில் குடியிருப்பின் 11-வது மாடிக்கு சென்ற அந்த பெண் திடீரென்று கீழே குதித்தார். கீழே நின்ற சிவப்பு நிற கார் மீது அவர் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மேலிருந்து கீழே விழுந்ததில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

இதுபற்றிஅறிந்ததும் ஐகிரவுண்டு போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவர் சஞ்சய் நகரை சேர்ந்த பிரக்ருதி (வயது 18) என்றும், அவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் தெரிந்தது.

அவர் என்ன காரணத்திற்காக சஞ்சய் நகரில் இருந்து சாளுக்கியா சர்க்கிளுக்கு வந்து தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. அதுகுறித்து மாணவியின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரக்ருதி தற்கொலை செய்து கொள்ள லிப்ட் வழியாக செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News