இந்தியா

வீட்டை விட்டு வெளியேற சொன்னதால் ஆத்திரம்- தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணன்

Published On 2023-03-07 04:25 GMT   |   Update On 2023-03-07 04:26 GMT
  • ஆத்திரத்தில் தம்பியை குத்திக்கொலை செய்ததை எண்ணி வருத்தப்பட்டு 30 மணி நேரம் தம்பியின் பிணத்தின் அருகிலேயே நரசிம்ம ராஜு உட்கார்ந்து கொண்டு இருந்தார்.
  • வீட்டை விட்டு வெளியே வந்த நரசிம்ம ராஜு அங்கிருந்தவர்களிடம் தம்பியை குத்தி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கணபவரம், கொல்லலடியப்பா பகுதியை சேர்ந்தவர்கள் நரசிம்ம ராஜு (வயது 70). இவரது தம்பி ராமகிருஷ்ண ராஜு (68). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. பெற்றோர்கள் இறந்து விட்டதால் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

விவசாய கூலி வேலை செய்து வந்த நரசிம்மராஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மேலும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நரசிம்மராஜு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி தனது தம்பியிடம் அழுது புலம்பினார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ராமகிருஷ்ண ராஜு உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டை விட்டு போக வேண்டியது தானே. வீட்டில் இருந்து கொண்டு ஏன் தொல்லை கொடுக்கிறாய் என கூறினார்.

இதனால் தம்பி மீது கோபத்தில் இருந்த நரசிம்மராஜு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தூங்கிக்கொண்டு இருந்த தம்பியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ராமகிருஷ்ணராஜு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ஆத்திரத்தில் தம்பியை குத்திக்கொலை செய்ததை எண்ணி வருத்தப்பட்டு 30 மணி நேரம் தம்பியின் பிணத்தின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

நேற்று பிணத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த நரசிம்ம ராஜு அங்கிருந்தவர்களிடம் தம்பியை குத்தி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமகிருஷ்ணராஜுவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிம்மராஜுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News