கேரளாவில் சகோதரருக்கு 434 மீட்டர் நீளம் கடிதம் எழுதி பெண் உலக சாதனை
- திருமணத்திற்கு பின் கிருஷ்ணப்ரியா ஆண்டுதோறும் சர்வதேச சகோதரர்கள் தினத்தன்று தனது சகோதரருக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
- கடிதத்தை கிருஷ்ணபிரசாத் ஆர்வத்துடன் அளந்தபோது, அது 434 மீட்டர் நீளத்தில் இருந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பீரு மேட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்ரியா. பெரு வந்தானம் கிராம பஞ்சாயத்தில் என்ஜினீயராக உள்ளார். இவரது சகோதரர் பெயர் கிருஷ்ணபிரசாத்.
திருமணத்திற்கு பின் முண்ட காயத்தில் தங்கி உள்ள கிருஷ்ணப்ரியா ஆண்டுதோறும் ஒவ்வொரு சர்வதேச சகோதரர்கள் தினத்தன்றும் (மே 24) தனது சகோதரருக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார்.
ஆனால் இந்த ஆண்டு வேலையின் காரணமாக குறிப்பிட்ட நாளில் அவரால் அண்ணனுக்கு கடிதம் எழுத முடியவில்லை. அதன்பிறகு மற்றொரு நாளில் அண்ணனுக்கு கடிதம் எழுத முடிவு செய்தார்.
தங்களது பாசம், உறவு என கிருஷ்ணப்ரியா எழுதிய கடிதம் நீளமாக சென்றது. இதற்காக அவர் காகிதக் கட்டுக்குப் பயன்படுத்தப்படும் 15 ரோல்களை வாங்கி தனது கடிதத்தை எழுதி உள்ளார்.
கடிதத்தை முடிக்க அவருக்கு 12 மணிநேரம் ஆனது. பின்னர் அந்த கடிதத்ததை அண்ணனுக்கு அனுப்பி வைத்தார். தங்கையிடம் இருந்து 5 கிலோ எடையில் வந்த பார்சலை பார்த்த கிருஷ்ணபிரசாத் பரிசுப்பொருளாக இருக்கும் என நினைத்து வாங்கி பிரித்துப் பார்த்தார்.
ஆனால் அதில் கடிதம் மட்டுமே இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த கடிதத்தில் அவர்களின் உறவைப் பற்றி கிருஷ்ணப்பிரியா உணர்ச்சியுடன் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தை கிருஷ்ணபிரசாத் ஆர்வத்துடன் அளந்தபோது, அது 434 மீட்டர் நீளத்தில் இருந்தது. இதனை அவர் கொல்கத்தாவைச் சேர்ந்த யுனிவர்சல் ரெக்கார்ட் ஃபோரத்திற்கு அனுப்பினார். அவர்கள் உலக சாதனையை உறுதிப்படுத்தினர்.
5 கிலோ எடையில் 434 மீட்டர் நீளத்திற்கு சகோதரனுக்கு கடிதம் எழுதிய சகோதரியின் உலக சாதனை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.