இந்தியா

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் 5 மணி நேரம் ஆய்வு- பலத்த பாதுகாப்புடன் நடந்தது

Published On 2023-08-04 06:55 GMT   |   Update On 2023-08-04 07:33 GMT
  • ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் அங்கு சிவலிங்கம் இருப்பதாக கூறி இருந்தனர்.
  • ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யக்கூடாது என்று மசூதி நிர்வாகம் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கிறது.

வாரணாசி:

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி இந்து கோவில் மீது கட்டப்பட்டு இருப்பதாக டெல்லியை சேர்ந்த 5 பெண்கள் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து அந்த மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல் துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கை விசாரித்த வாரணாசி மாவட்ட கோர்ட்டும், அலகாபாத் ஐகோர்ட்டும் ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யலாம் என்று உத்தரவிட்டது.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு ஞானவாபி மசூதியில் தொல்லியில் துறையினர் அறிவியல் பூர்வ ஆய்வு தொடங்கினார்கள். 41 பேர் கொண்ட அதிகாரிகள் குழு 2 பிரிவாக பிரிந்து இந்த ஆய்வை மேற்கொண்டது.

ஏற்கனவே ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் அங்கு சிவலிங்கம் இருப்பதாக கூறி இருந்தனர். லிங்கம் உள்ள அந்த பகுதி மூடி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தை தவிர மற்ற இடங்களில் இன்று தொல்லியல் துறையினர் ஆய்வை மேற்கொண்டனர்.

வாரணாசி கமிஷனர் அசோக்முத்தா, மாஜிஸ்திரேட்டு ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு பணிகள் நடந்தன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. துணைநிலை ராணுவத்தினர் மசூதி முன்பு குவிக்கப்பட்டு இருந்தனர்.

மசூதி நிர்வாக பிரதிநிதிகள் முன்பு ஆய்வு பணிகள் நடந்தன. ஆனால் இஸ்லாமிய கமிட்டி உறுப்பினர்கள் இந்த ஆய்வு பணியை புறக்கணித்தனர். மதியம் 12 மணி வரை சுமார் 5 மணி நேரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யக்கூடாது என்று மசூதி நிர்வாகம் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. அந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.

Tags:    

Similar News