இந்தியா

பாகிஸ்தான் ட்ரோனை கைப்பற்றிய பிஎஸ்எப் வீரர்கள்- போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

Published On 2023-06-22 13:08 GMT   |   Update On 2023-06-22 13:08 GMT
  • எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
  • பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று கண்காணிக்கப்படுகிறது.

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் பசில்கா மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள ஜோதவாலா கிராமத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்ற போது, இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரோனை கைப்பற்றினர். அந்த டிரோனில் 2 பாக்கெட்டுகளில் 2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த ஹெராயினை கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது. சரியான நேரத்தில் ட்ரோனை கைப்பற்றியதால் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன் கைப்பற்றப்பட்டதையடுத்து அப்பகுதியில் பாகிஸ்தான் கடத்தல் கும்பல்களால் வேறு ஏதேனும் போதைப் பொருட்கள் வீசப்பட்டுள்ளதா என எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லைக் கிராமங்களில் உள்ளவர்கள் பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று கண்காணிக்கப்படுகிறது. பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பஞ்சாப் மாநிலத்தை போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு வழித்தடமாக மாற்றியதால், போதைப்பொருள் சப்ளை செய்யும் இடத்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News