செய்திகள்
பணமோசடி வழக்கு- அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு
அனில் தேஷ்முக்கின் விசாரணைக் காவலை மேலும் 9 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள மதுபார்கள், ஹோட்டல்களில் இருந்து ரூ.100 கோடி வசூலித்து தரக் கோரி அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்துவதாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அனில் தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்தார்.
ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அமலாக்கத்துறை தரப்பில் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அனில் தேஷ்முக்கிடம் கடந்த திங்கட்கிழமை 12 மணி நேரம் விசாரணை நடத்தி நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் அவரை நவம்பர் 6ம் தேதி வரை விசாரணைக் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக் காவல் முடிந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அனில் தேஷ் முக்கிடம் இருந்து மேலும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் விசாரணைக் காவலை மேலும் 9 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது.
தேஷ்முக்குடன் அவரது உதவியாளர்கள் குந்தன் ஷிண்டே, சஞ்சீவ் பாலண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.