செய்திகள்
லடாக் பகுதி

காஷ்மீர், லடாக்கில் இந்தியர்கள் நிலம் வாங்கலாம்

Published On 2020-10-27 16:59 GMT   |   Update On 2020-10-27 16:59 GMT
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இனி நிலம் வாங்கலாம். இதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதுடன் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இந்நிலையில் காஷ்மீர் குறித்து மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மூன்றாம் சட்டம் 2020 என்ற மற்றுமொரு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதில், காஷ்மீர் மாநிலத்தில் இருந்த 12 மாநில சட்டங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன.

26 சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தின் 17-வது பிரிவில் ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் என்ற வார்த்தையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

மத்திய அரசின் புதிய சட்டப்படி, இந்தியர்கள் யாரேனும், காஷ்மீர் மற்றும் லடாக்கில் இனி நிலம் வாங்க முடியும். அதேநேரத்தில் விவசாய நிலத்தை வாங்க முடியாது. விவசாய நிலத்தை மற்றொரு விவசாயிக்கு மட்டுமே விற்கவோ மாற்றம் செய்யவோ முடியும். விவசாயி அல்லாதவருக்கு, அரசின் அனுமதிக்கு பிறகே விற்க முடியும். இவ்வாறு அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News