செய்திகள்
கோப்புப்படம்

‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் இதுவரை 2.38 கோடி குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன - மத்திய அரசு

Published On 2020-10-15 01:13 GMT   |   Update On 2020-10-15 01:13 GMT
ஜல் ஜீவன் திட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் 2.38 கோடி குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன. கோவாவில் 100 சதவீத குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்தும் ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜல் ஜீவன் மிஷன் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. 2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் குடிநீரை கொண்டு சேர்ப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 19 கோடியே ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 385 குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 2019 ஆகஸ்டு 15 வரை 3 கோடியே 23 லட்சத்து 62 ஆயிரத்து 838 குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றிருந்தன. இது 17.02 சதவீதமாகும். அதற்கு பின்பு ஜல்ஜீவன் திட்டத்தின்படி இன்றைய தேதி வரை இணைப்பு பெற்றவர்களையும் சேர்த்து 5 கோடியே 61 லட்சத்து 85 ஆயிரத்து 224 குடும்பங்கள் குழாய் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். இது மொத்த கிராமப்புற குடும்பங்களில் 29.55 சதவீதமாகும்.

2019-ம் ஆண்டு ஆகஸ்டு 15-க்கு பிறகு தற்போது வரை 2 கோடியே 38 லட்சத்து 21 ஆயிரத்து 386 குடும்பங்கள் குழாய் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன. அதிகபட்சமாக கோவாவில் 100 சதவீத கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு தண்ணீரில் தன்நிறைவு பெற்ற மாநிலமாக முன்னிலை பெற்றுள்ளது. அங்கு 2.30 லட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டமானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை அடிப்படையாகக் கொண்டது. குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்கிறது. தண்ணீர் மூலம் பரவும் டயாரியா, காலரா, டைபாய்டு, வயிற்றுப் போக்கு போன்ற பல நோய்களை கட்டுப்படுத்தி மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும்.

பல இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீரும், வேதிப்பொருட்களான ஆர்சனிக், புளூரைடு மற்றும் கனரக தாதுக்கள் கலந்த குடிநீர் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்துவதால் மோசமான நோய்கள் ஏற்படலாம். இத்தகைய பிரச்சினைகளில் இருந்து அனைத்து கிராமங்களையும் காத்து, மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க எல்லா பஞ்சாயத்துகளையும், உதவி கமிட்டிகளையும் இந்த திட்டத்தில் பங்கெடுக்கச் செய்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இது வெற்றித் திட்டமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News