செய்திகள்
கோப்புபடம்

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

Published On 2020-09-13 05:58 GMT   |   Update On 2020-09-13 12:26 GMT
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46 லட்சத்து 59 ஆயிரத்து 984 ஆக அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

அதேநேரம் இந்தியாவின் தினசரி பலி எண்ணிக்கை ஏறத்தாழ 1,200 என்ற அளவில்தான் இருப்பது ஆறுதலை அளிக்கிறது. இதன் மூலம் நாட்டின் பலி சதவீதம் 1.66 என்ற அளவிலேயே நீடிக்கிறது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வரை குணமடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்து 24 ஆயிரத்து 196 ஆக அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “கடந்த மே மாதம் 50,000 ஆக இருந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 36 லட்சமாக அதிகரித்துள்ளது.

தினந்தோறும் அதிகபட்சமாக 70,000 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.8 மடங்கு அதிகமாக உள்ளது” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-

* குணமடைந்தவர்கள் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும்

* மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்

* யோகாசனம், பிராணயாமா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

* சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News