செய்திகள்
பிரியங்கா காந்தி

வேலையிழப்பு விவகாரத்தில் பாஜக அரசு மவுனம் காப்பது ஆபத்தானது - பிரியங்கா காந்தி

Published On 2019-07-26 15:48 IST   |   Update On 2019-07-26 15:48:00 IST
ஆட்டோ மொபைல் துறையில் 10 லட்சம் பேர் வேலையிழப்பு விவகாரத்தில் பா.ஜனதா அரசு மவுனம் காப்பது மிகவும் ஆபத்தானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி:

ஆட்டோ மொபைல் துறை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

இத்துறையில் 50 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் கடும் வீழ்ச்சி காரணமாக பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது:-

ஆட்டோ மொபைல் துறையில் 10 லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். இந்த துறையில் வேலை பார்ப்பவர்கள் புதிய வேலையை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.


ஆனால் வேலையிழப்பு பற்றி பா.ஜனதா அரசு மவுனம் காப்பது மிகவும் ஆபத்தானது. பலவீனமான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை சேதப்படுத்தும் கொள்கைகள் ஆகியவற்றால் ஆபத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு சங்க நிர்வாகி கூறும் போது, வாகன உதிரிபாகங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது 15 முதல் 20 சதவீதம்வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பணி நீக்கம் தவிர்க்க முடியாததாகி விடும். இதனால் 10 லட்சம் பேர் வரை வேலையை இழக்கலாம் என்றார்.

Similar News