செய்திகள்
அமேதி மக்களுடன் எனது உறவு எப்போதும் நிலைத்திருக்கும் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி
அமேதி தொகுதி மக்களுடனான தனது உறவு எப்போதும் நிலைத்திருக்கும். தேவைப்படும் போதெல்லாம் உங்களது பிரச்சனைகளுக்காக நான் முன்நிற்பேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் நான்குமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் அமேதி தொகுதியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த ராகுல், வயநாட்டில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் முதன்முறையாக இன்று அமேதி தொகுதிக்கு வந்தார். அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், பிரமுகர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ராகுல் பங்கேற்றார்.
அக்கூட்டத்தில் பேசிய ராகுல் கூறியதாவது:
அமேதி தொகுதியில் நான் தோல்வியடைந்தாலும் எனக்கும் இந்த தொகுதிக்கும் இடையே மிகவும் நெருக்கமான பிணைப்பு உள்ளது. அந்த பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது.
நேரம் கிடைக்கும் போதேல்லாம் நானும் எனது சகோதரி பிரியங்கா காந்தியும் இந்த தொகுதி மக்களை சந்திக்க நிச்சயம் இங்கு வருவோம். அமேதி தொகுதி மக்களின் நலனை பாதுகாக்க எத்தகைய சூழ்நிலையிலும் துணை நிற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.