செய்திகள்

புல்வாமா தாக்குதல்: இம்ரான்கான் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமித்‌ஷா கேள்வி

Published On 2019-03-02 07:14 IST   |   Update On 2019-03-02 07:14:00 IST
புல்வாமா தாக்குதலுக்கு இதுவரை பாகிஸ்தான் பிரதமர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?. தாக்குதல் தவறு என அவர் வாய் திறக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பாஜக தலைவர் அமித்‌ஷா கூறியுள்ளார். #PulwamaAttack #ImranKhan #AmitShah
புதுடெல்லி:

பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. நம் நாட்டின் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும். இனி இந்தியா மீது தாக்குதல் நடத்துவற்கு முன்பு ஒரு முறைக்கு 10 தடவை எதிரிகள் யோசிப்பார்கள். எல்லை தாண்டிய தாக்குதல் மூலம் பயங்கரவாதிகளுக்கு மோடி அரசு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

புல்வாமா தாக்குதலுக்கு இதுவரை பாகிஸ்தான் பிரதமர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?. தாக்குதல் தவறு என அவர் வாய் திறக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி இருக்கும் போது அவரை எப்படி நம்புவது?.

இந்திய வீரர்களின் தியாகத்தை மத்திய பா.ஜனதா அரசு அரசியலாக்குகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது, பாகிஸ்தானுக்கும், அந்நாட்டு ஊடகங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும்.

பாகிஸ்தான் பிடியில் இருந்து இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை குறுகிய காலத்தில் மீட்டு உள்ளோம். இது எங்களின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி.

இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #ImranKhan #AmitShah

Similar News