செய்திகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை மகிரா கான்

புல்வாமா தாக்குதல் எதிரொலி- இந்திய சினிமா துறையில் பாகிஸ்தான் கலைஞர்கள் பணியாற்ற தடை

Published On 2019-02-18 10:57 GMT   |   Update On 2019-02-18 11:44 GMT
புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்திய திரை தொழிலாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. #PulwamaAttack #PakistanActorsBanned
மும்பை:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இதன் காரணமாக பல்வேறு அமைப்பினரும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அனைத்து இந்திய திரை தொழிலாளர் சங்கம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், ‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை அனைத்து இந்திய திரைத் தொழிலார்கள் சங்கம் தெரிவிக்கின்றது. வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம். மனிதநேயமற்ற இந்த தாக்குதலுக்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக நாங்கள் என்றும் துணை நிற்போம்.



இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த திரைப்பட கலைஞர்களும் பணியாற்ற தடை விதிக்கிறோம். ஒருவேளை எந்த அமைப்பாவது பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்களை பயன்படுத்தினால், அந்த அமைப்பு தடைவிதிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசத்திற்கே முதல் முக்கியத்துவம். தேசத்திற்காக துணை நிற்போம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #PulwamaAttack #PakistanActorsBanned

Tags:    

Similar News