செய்திகள்

கேரளாவில் கால்களால் கார் ஓட்டும் இளம்பெண்ணுக்கு டிரைவிங் லைசென்ஸ்

Published On 2018-09-30 12:43 GMT   |   Update On 2018-09-30 12:52 GMT
இந்தியாவிலேயே முதன்முறையாக கேரளாவில் கால்களால் கார் ஓட்டும் இளம்பெண்ணுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கும்படி கேரள ஐகோர்ட் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. #keralawomandriving #drivinglicense

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிலுமோல் மரிய தாமஸ் (வயது 26). மாற்றுத்திறனாளியான இவருக்கு இரண்டு கைகளும் இல்லை.

அப்படி ஒரு குறை இருப்பதை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் தனது கால் மூலம் கார் ஓட்டக்கற்றுக்கொண்டார். சக மனிதரைப்போல் இயல்பாக கார் ஓட்டினார். ஜிலுமோல் மரிய தாமசின் அபார திறமையை கண்ட அவரது நண்பர்கள் கார் வாங்கி கொடுத்தனர்.

3 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு டிரைவிங் லை சென்ஸ் வேண்டும் என்று இடுக்கி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் மோட்டார் வாகன சட்டப்படி கால் மூலம் வாகனம் ஓட்டுவது குற்றம் என்று அந்த விண்ணப்பதை நிராகரித்தது.

இதனையடுத்து அவர் கேரள ஐகோர்ட்டில் தனக்கு கார் ஓட்ட லைசென்ஸ் வழங்க உத்தரவிடவேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். ஜிலுமோல் மரிய தாமசின் மனுவை ஏற்ற ஐகோர்ட் அவருக்கு லைசென்ஸ் வழங்கும்படி போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

சமீபத்தில் அவர் வாகன சோதனை ஓட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஜிலுமோல் மரிய தாமஸ் கால்கள் மூலம் காரை எளிதில் இயக்குவதை கண்டு பலர் ஆச்சரியம் அடைந்தனர். ஜிலுமோல் மரிய தாமசுக்கு அடுத்த வாரம் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து ஜிலுமோல் மரிய தாமஸ் கூறும்போது, இந்தியாவிலேயே கால்கள் மூலம் கார் ஓட்டி டிரைவிங் லைசென்ஸ் பெறும் முதல் நபர் நான் தான் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விடா முயற்சி, தன்னம்பிக்கையையும் நான் எப்போதும் இழக்கவில்லை. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. 

இவ்வாறு அவர் கூறினார். #keralawomandriving #drivinglicense

Tags:    

Similar News