செய்திகள்

உ.பி.யில் ஆப்பிள் நிறுவன விற்பனை அதிகாரி கொல்லப்பட்ட இடத்தில் சிறப்பு விசாரணை குழு ஆய்வு

Published On 2018-09-30 10:21 GMT   |   Update On 2018-09-30 10:21 GMT
உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் ஆப்பிள் நிறுவன பணியாளர் விவேக் திவாரி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட கோமதி நகரில் இன்று சிறப்பு விசாரணை குழு ஆய்வு செய்து வருகின்றனர். #SIT #VivekTiwarideath
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி. இவருக்கு கல்பனா என்ற மனைவியும், ஷானு (12), ஷிவி (7) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
 
28-9-2018 அன்றிரவு விவேக் திவாரி தனது தோழியுடன் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். நள்ளிரவு 1.30 மணியளவில் கோமதி நகர் விரிவாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரது காரை நிறுத்துமாறு கூறினர்.

ஆனால் அவர் காரை நிறுத்தாமல் சென்றதால் போலீஸ்காரர்கள் பிரசாத் சவுத்திரி, சந்தீப் ஆகியோர் ஆத்திரம் அடைந்து மோட்டார் சைக்கிளில் காரை துரத்தி சென்றனர்.

பின்னர் கார் மீது பிரசாத் சவுத்ரி துப்பாக்கியால் சுட்டார். இதில் கார் கண்ணாடியை துளைத்துச் சென்ற துப்பாக்கி தோட்டா, விவேக் திவாரி மீது பாய்ந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தேவை இல்லாமல் என்கவுண்டரில் அவரை கொன்று விட்டதாக  எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர்கள் பிரசாந்த் சவுத்ரி, சந்தீப் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இந்த சம்பவம் குறித்து  சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், விவேக் திவாரி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #SIT #VivekTiwarideath
Tags:    

Similar News