செய்திகள்
ரேவாரி மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரம் - முக்கிய குற்றவாளிக்கு 4 நாள் போலீஸ் காவல்
அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிக்கு 4 நாள் போலீஸ் காவலும், இருவருக்கு 14 நாள் நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டுள்ளது. #Rewari #RewariRapeCase
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன்பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்யதனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் நிஷு உள்பட 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர்.
இதற்கிடையே, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நிஷு உள்பட 3 பேரை சிறப்பு அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ரேவாரி மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களில் முக்கிய குற்றவாளியான நிஷுவுக்கு 4 நாள் போலீஸ் காவலும், டாக்டர் சஞ்சீவ் மற்றும் தீன்தயாள் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டுள்ளது. #Rewari #RewariRapeCase