செய்திகள்

சர்ஜிகல் ஸ்டிரைக் தினத்தை பல்கலை.களில் கொண்டாட வேண்டும் - சுற்றறிக்கையால் சர்ச்சை

Published On 2018-09-21 14:45 IST   |   Update On 2018-09-21 14:55:00 IST
இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்களும் கொண்டாட வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அனுப்பிய சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #UGC #SurgicalStrikeDay
புதுடெல்லி:

2016 ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை தாண்டிச்சென்ற இந்திய ராணுவம்,  அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அளித்தது. சர்ஜிகல் ஸ்டிரைக் என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பின்னர் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், வரும் 29-ம் தேதியை சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு முன்னர் அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அன்றைய தினம், என்.சி.சி அணிவகுப்பு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கொண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

இந்த சுற்றறிக்கை சர்ச்சையை உண்டாக்கியது. நாட்டின் ராணுவத்தின் செயல்பாட்டை அரசியலாக்கும் நடவடிக்கை இது என விமர்சனங்கள் எழுந்தன. தன்னாட்சி அமைப்பான யூஜிசி இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியது கிடையாது என காங்கிரஸ், திரினாமுல் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், இந்த சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ள மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “சர்ஜிகல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாட வேண்டும் என எந்த கல்லூரியையும் வற்புறுத்தவில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றே நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டன” என கூறியுள்ளார்.
Tags:    

Similar News