செய்திகள்

ரேவாரி மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது

Published On 2018-09-17 00:36 IST   |   Update On 2018-09-17 00:36:00 IST
அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். #Rewari #RewariRapeCase
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன்பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என்றனர். 

இதற்கிடையே, மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ராணுவ வீரர் பங்கஜ், மனீஷ், நிஷு உள்பட 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் நேற்று வெளியிட்டனர்.

இந்நிலையில், ரேவாரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நிஷுவை சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த போலீசார் கைது செய்தனர். #Rewari #RewariRapeCase 
Tags:    

Similar News