செய்திகள்

டெல்லி மேல்-சபையில் அகாலி தளம் கட்சிக்கு துணைத் தலைவர் பதவி?

Published On 2018-08-05 12:29 IST   |   Update On 2018-08-05 12:29:00 IST
டெல்லி மேல்-சபையில் அகாலி தளம் சார்பில் நரேஷ்குஜ்ரால் துணை தலைவர் பதவிக்கு நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. #VenkaiahNaidu

புதுடெல்லி:

டெல்லி மேல்-சபை துணைத் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.கே.குரியன் பதவி காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. அதன் பிறகு துணைத் தலைவர் பதவி காலியாகவே உள்ளது.

மேல்-சபை தலைவராக இருக்கும் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு சபையை முழு நேரமும் நடத்தி வருகிறார். இதனால் அவருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே மேல்-சபை துணைத் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்.

கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி தொடங்கிய பாராளுமன்ற கூட்டம் வருகிற 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே அடுத்த வாரம் துணைத் தலைவர் தேர்தல் நடை பெறலாம் என்று தெரிகிறது.

பா.ஜனதா தனது கூட்டணி கட்சிகளான அகாலி தளம் அல்லது பிஜு ஜனதா தளம் கட்சிக்கு விட்டுத்தரலாம் என்று தெரிய வருகிறது.

அகாலி தளம் சார்பில் நரேஷ்குஜ்ரால் துணை தலைவர் பதவிக்கு நிறுத்தப்படலாம். அல்லது பிஜு ஜனதர தளத்துக்கு ஒதுக்கப்பட்டால் அக்கட்சியின் பிரசன்னா ஆச்சார்யா நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேல்-சபையில் பா.ஜன தாவுக்கு அதிக எம்.பி.க்கள் இருந்தாலும் எதிர்க் கட்சி கூட்டணி எம்.பி.க்கள் எண்ணிக்கை 113 ஆகவும், பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் எண்ணிக்கை 95 ஆகவும் உள்ளது. 32 எம்.பி.க்கள் நடுநிலை வகிக்கிறார்கள். அவர்கள் ஆதரவை பெறுவதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தல் அறிவிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. #VenkaiahNaidu

Tags:    

Similar News