செய்திகள்

மத்தியில் லோக்பால் நியமனத்தில் தாமதம் - மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கும் அன்னா ஹசாரே

Published On 2018-07-29 10:38 GMT   |   Update On 2018-07-29 10:38 GMT
லோக்பால் நியமனத்தில் காலம் தாழ்த்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்து காந்தி பிறந்த நாளில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் உண்ணாவிரத போரட்டத்தை அறிவித்துள்ளார். #Lokpal #AnnaHazare
மும்பை :

சமூக ஆர்வலரும், காந்திய வழி போராளியுமான அன்னா ஹசாரே முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது மத்தியில் லோக்பால் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் 12 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு நடத்தினார்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த போராட்டத்திற்கு பணிந்து அப்போதைய காங்கிரஸ் அரசு பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது.  அடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்த பா.ஜ.க அரசு லோக்பால் நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என தெரிவித்திருந்தது.

ஆனால், லோக்பால்  நீதிபதியை நியமனம் செய்வதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிருப்த்தி தெரிவித்தது.

இந்நிலையில், லோக்பால்  நீதிபதியை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்னா ஹசாரே கூறுகையில், ’மத்திய அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு ஊழலை ஒழிப்பதில் உரிய கவணம் செலுத்தவில்லை, லோக்பால் நீதிபதியை நியமிக்காமல் பல்வேறு காரணங்களை கூறி அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.

எனவே, மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த ஊரான ரலேகன் சித்தி கிராமத்தில் மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி முதல் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்போகிறேன்.

ஊழல் இல்லாத இந்தியாவை விரும்பும் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்’ என அன்னா ஹசாரே தெரிவித்தார். #Lokpal #AnnaHazare
Tags:    

Similar News