செய்திகள்

பெங்களூருவில் நடந்த விழாவில் கண்ணீர் விட்டு அழுதது ஏன்? கர்நாடக முதல்-மந்திரி விளக்கம்

Published On 2018-07-18 03:36 GMT   |   Update On 2018-07-18 03:36 GMT
பெங்களூருவில் நடந்த விழாவில் கண்ணீர் விட்டு அழுதது ஏன் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமி கடந்த 14-ந்தேதி பெங்களூரு ஜே.பி.பவனில், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கர்நாடக மாநில மக்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சியை புறக்கணித்து விட்டார்கள் என்றும் தான் முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை என்றும் கண்ணீர் விட்டு அழுதபடி தெரிவித்தார்.

இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதது ஏன் என்பதற்கு குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் இதுபற்றி கூறியதாவது:-

மாநில மக்களின் பிரச்சினைக்காக நான் பகிரங்கமாக கண்ணீர் சிந்தினேன். அரசு துறைகளில் தவறுகள் மீது நடவடிக்கை எடுப்பதில் எவ்வளவு கண்டிப்புடன் இருக்கிறேனோ அதே அளவுக்கு நான் உணர்ச்சிவசப்படும் நபராகவும் இருக்கிறேன். இது என்னுள் இருக்கும் சகஜமான குணம். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனது நடவடிக்கையும் கண்ணீர் சிந்தும் அளவுக்கே பாரபட்சமற்ற முறையில் இருக்கிறது. எனது குடும்பத்தை போல் உள்ள கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியது உண்மை தான். எனது கட்சி நிர்வாகிகளிடம் எனது வேதனையை பகிர்ந்து கொண்டேன். எனது கண்ணீருக்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News