செய்திகள்
பீகாரில் மதுவிலக்கினால் ஆண்டிற்கு ரூ. 5,280 கோடி சேமிப்பு
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டதால் ஒரு ஆண்டிற்கு சுமார் 5,280 கோடி ரூபாய் சேமிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. #Biharliquorban
பாட்னா:
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடந்த 2016-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் மதுவை தடை விதித்தார். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தின் வர்த்தகம் குறித்து ஆசிய அபிவிருந்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து அதன் முடிவை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வில் மதுவிலக்கு அமலானதால் தேன் விற்பனை 380% வரை அதிகரித்துள்ளதாகவும், சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டி விற்பனை 200% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் தரமான உணவுப்பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்குவதில் பெண்கள் அதிக அளவில் கவனம் செலுத்துவது அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. விலை உயர்ந்த சேலைகளின் வர்த்தகம் 1,751 சதவிகிதமும், உயர்தர ஆடைகளின் வர்த்தகம் 910 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
மேலும் 19% குடும்பங்கள் மதுவிற்கு செலவழிக்கு பணத்தில் புதிய சொத்துக்களை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. மது மீதான தடையை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் மாதந்தோரும் ரூ.440 கோடி சேமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு ஆண்டில் 5,280 கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Biharliquorban