செய்திகள்

ஆட்டு உடலை மீட்க கிணற்றில் இறங்கிய வாலிபர் வி‌ஷவாயு தாக்கி பலி

Published On 2018-06-18 08:17 GMT   |   Update On 2018-06-18 08:17 GMT
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கறிக்காக செத்து மிதந்த ஆட்டு உடலை மீட்க கிணற்றில் இறங்கிய வாலிபர் விஷவாயு தாக்கி பலியானார்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா பல்லசேனையை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கண்ணன் (வயது 42). இவர் இன்று காலை அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க புறப்பட்டார்.

வரும்வழியில் ஒரு பாதுகாப்பற்ற கிணறு இருந்தது. அதை எட்டிப் பார்த்தபோது கிணற்றில் ஒரு ஆடு செத்து மிதந்தது. கிணற்றில் இறங்கி ஆட்டை மீட்டால் கறி கிடைக்கும் என்று நினைத்த கண்ணன் இது குறித்து தனது நண்பருக்கு தெரிவித்தார். அவரது நண்பரும் வந்தார்.

கிணற்று மேட்டில் நண்பர் நின்று கொண்டு ஆட்டின் உடலை கயிறு மூலம் இழுக்க தயாரானார். 30 அடி அழமுள்ள கிணற்றில் 5 அடி அழத்திற்கு தண்ணீர் இருந்தது.

இந்நிலையில் கண்ணன் கிணற்றில் கயிறு மூலம் இறங்க தொடங்கினார். 20 அடி அழத்திற்கு சென்றதும் கண்ணனை வி‌ஷவாயு தாக்கியது. இதில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. என்னால் முடியவில்லை என்று கிணற்றில் இருந்து அபாய குரல் எழுப்பினர். முடியவில்லை என்றால் வந்து விடு என்று நண்பர் கூறினார்.

ஆனால் திடீரென கண்ணன் கிணற்றுக்குள் விழுந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர் இது குறித்து சித்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கண்ணனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News