செய்திகள்
நாள் ஒன்றுக்கு 15 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் இந்திய ரெயில்வே
இந்திய ரெயில் பாதைகளில் நடைபெறும் விபத்துகளில் தினமும் 15 பேர் உயிரிழப்பதாக ரெயில்வே நிர்வாகம் அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndianRailway #TrainAccidents #trainaccidentdeath
புதுடெல்லி:
இந்தியாவில் ஏற்படும் ரெயில் விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதையடுத்து சமூக ஆர்வலர் ஒருவர் ரெயில் விபத்துக்களில் இறப்பவர்கள் பற்றிய விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ரெயில்வே நிர்வாகம் 2014-ம் ஆண்டு முதல் மார்ச் 2018 வரை நடந்த ரெயில்வே விபத்துகளில் 23,013 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக தெற்கு - மத்திய ரெயில்வே மண்டலத்தில் 3,874 பேர் இறந்துள்ளனர். மத்திய ரெயில்வே மண்டலத்தில் 3,333 பேரும், மேற்கு ரெயில்வே மண்டலத்தில் 2,384 பேரும், வடக்கு ரெயில்வே மண்டலத்தில் 2,127 பேரும், வடக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் 1,738 பேரும், கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் 1085 பேரும், வட கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் 775 பேரும், ரெயில் விபத்துகளில் பலியாகியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
குறைந்தபட்சமாக வட மேற்கு ரெயில்வே மண்டலத்தில் 278 பேர் ரெயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் ரெயில் பாதையில் நடக்கும் விபத்தில் தினமும் சராசரியாக 15 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் ரெயில்வே அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 12,598 பேர் ரெயில் விபத்துக்களில் காயமடைந்துள்ளதாகவும், விபத்துக்கள் அதிகமாக தண்டவாளத்தைக் கடக்கும் போது நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndianRailway #TrainAccidents #trainaccidentdeath