செய்திகள்

படகில் உலகை சுற்றி வந்த கடற்படை வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2018-05-23 15:45 IST   |   Update On 2018-05-23 15:45:00 IST
படகு பயணம் மூலம் 8 மாதங்களில் உலகை சுற்றி வந்து சாதனை படைத்த இந்திய கடற்படை வீராங்கனைகள் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். #INSVTarini #PMmodi
புதுடெல்லி:

இந்திய கடற்படையில் பணியாற்றிவரும் பெண்கள் தங்களது திறமைகளை பறைசாற்றும் விதமாக வருடம் தோறும் ஏதாவது சாகசத்தை நிகழ்த்தி வருவர். அதே போல் இம்முறை கடற்படை பெண்கள் பாய்மரப்படகு மூலம் உலகை கடல் வழியில் சுற்றி வரும் பயணத்தை தொடங்கினர்.

பெண் வீராங்கனைகள் மட்டும் கொண்ட இந்த குழுவானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்கள் பயணத்தை தொடங்கியது. பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கொடியசைத்து அதனை தொடங்கி வைத்தார்.


6 கட்டங்களாக நடைபெற்ற இந்தப் பயணத்தில், எரிபொருள் நிரப்புவது, பராமரிப்பு பணிகள் ஆகியவற்றுக்காக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் மற்றும் ஃபாக்லண்டஸ் ஆகிய நாடுகளின் துறைமுகங்களில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டது. இந்த படகு 5 நாடுகளுக்கு சென்றுள்ளது. 4 கண்டங்களை தாண்டி, 3 பெருங்கடல்களை கடந்து 8 மாதங்களில் உலகை சுற்றி வந்து சாதனைப் படைத்துள்ளது.

லெப்டினண்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையிலான கமாண்டர் பிரதிபா ஜம்வால், ஸ்வாதி, ஐஸ்வரியா போடாபதி, விஜய தேவி மற்றும் பாயல் குப்தா ஆகிய 5 பெண்கள் மட்டும் கொண்ட குழு இந்த சாதனையை புரிந்துள்ளது.  முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தாரினி படகு இந்த பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது சிறப்புக்குரிய அம்சமாகும்.


தங்கள் உலக சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு கடந்த திங்கட்கிழமை தாயகம் திரும்பிய தாரிணி குழுவினரை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் சென்று வரவேற்றார்.

இந்நிலையில், படகு பயணம் மூலம் 8 மாதங்களில் உலகை சுற்றி வந்து சாதனை படைத்த இந்திய கடற்படை வீராங்கனைகள் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். #INSVTarini #PMmodi
Tags:    

Similar News