செய்திகள்

மொரீஷியஸ் நாட்டுக்கு ரூ 3 ஆயிரம் கோடி நிதியுதவி - பிரதர் மோடி அறிவிப்பு

Published On 2017-05-27 09:59 GMT   |   Update On 2017-05-27 09:59 GMT
இந்தியா, மொரீஷியஸ் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் விதமாக அந்நாட்டிற்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 3227 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் குட்டி தீவு நாடு மொரீஷியஸ், இந்நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் நேற்று அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார். இன்று காலை ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

அப்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கடல்சார் ஒப்பந்தம்
உள்ளிட்ட நான்கு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாயின. இதனையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, இந்தியா, மொரீஷியஸ் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் விதமாக அந்நாட்டிற்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 3227 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், மொரீஷியஸ் வளர்ச்சிக்கு இந்தியா தனது சிறப்பான பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் நிதியுதவிக்கு மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் நன்றி தெரிவித்துக்கொண்டார். பிரவிந்த் ஜக்நாத் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News