செய்திகள்

ஒடிசா ஆஸ்பத்திரி தீ விபத்தில் 22 நோயாளிகள் பலி: உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவு

Published On 2016-10-18 18:53 GMT   |   Update On 2016-10-18 18:53 GMT
ஆஸ்பத்திரி தீ விபத்தில் 22 நோயாளிகள் பலியானது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டார்.
புவனேசுவரம்:

ஆஸ்பத்திரி தீ விபத்தில் 22 நோயாளிகள் பலியானது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டார்.

ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் 4 மாடிகள் கொண்ட ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் மின்கோளாறு காரணமாக நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்துக்கொண்டது. தீ மளமளவென்று அருகில் இருந்த டயாலிசிஸ் வார்டுக்கும் பரவியது.

இதனால் இந்த 2 வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். எனினும் அவர்களில் 22 பேர் தீயில் கருகியும், அடர்ந்த புகை மண்டலத்துக்குள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டும் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் பலர் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர்.

தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், விரைந்து சென்ற தீயணைக்கும் படையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 106 நோயாளிகளை மீட்டனர். அவர்கள் அருகில் உள்ள எய்ம்ஸ் மற்றும் அம்ரி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று முன்தினம் நள்ளிரவு தீ விபத்து நடந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். நேற்று காலை பிற ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் பார்த்து ஆறுதல் கூறினார்.

வருவாய் வட்டார ஆணையர் தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டார். இதேபோல் மருத்துவ கல்வி மற்றும் பயிற்சியின் இயக்குனரும் இந்த தீ விபத்து பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கிடையே, தீ விபத்து நடந்த தனியார் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் டயாலிசிஸ் வார்டுகளுக்கு மாநில சுகாதாரத்தை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிப்பதும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தீ விபத்து தடுப்பு சாதனங்கள் வைக்கப்பட்டு உள்ளனவா? என்பதை சோதனை செய்யும்படியும் மாநில அரசு உத்தரவிட்டது.

தீ விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஆஸ்பத்திரியில் எடுத்துச் செல்வதற்கான இலவச வாகன வசதியும் செய்யப்பட்டது. 22 உடல்களில் இதுவரை 20 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன. இவற்றில் 5 பேரின் உடல்கள் பூரியில் உள்ள சுவர்கத்வார் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களுக்கு, ஒடிசா கவர்னர் எஸ்.சி.ஜமீர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, ஜுவல் ஓரம், தர்மேந்திர பிரதான் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மாநில சுகாதார மந்திரி அடானு நாயக் கூறுகையில், “இந்த சம்பவத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் கவனக்குறைவு இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தீ விபத்து நடந்த தனியார் ஆஸ்பத்திரியை நிர்வகித்து வரும் சிக்‌ஷா ஓ அனுசந்தன் பல்கலைக்கழகம், தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்து உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தனது ஊழியர்கள் 4 பேரையும் இடை நீக்கமும் செய்தது. 

Similar News