செய்திகள்

மாயாவதி பற்றி விமர்சனம்: தயாசங்கர் மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ்

Published On 2016-07-22 15:01 IST   |   Update On 2016-07-22 15:01:00 IST
மாயாவதி பற்றி விமர்சனம் செய்த தயாசங்கருக்கு நோட்டிஸ் அனுப்பபட்டு உள்ளதாக மகளிர் ஆணைய தலைவி கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

தேசிய மகளிர் ஆணைய தலைவி லலிதா குமாரமங்கலம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி பற்றி அம்மாநில பா.ஜனதா துணைத்தலைவர் தயாசங்கர் சிங் தரக்குறைவாக விமர்சனம் செய்தது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் தயாசங்கர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். பா.ஜனதா கட்சி சார்பிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அதை நிவர்த்தி செய்ய சரியான சட்டம் இல்லை.

தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் பலபுகார்கள் வந்துள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்கிறோம்.

திருநங்கைகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு மசோதா என்பது நல்ல வி‌ஷயம் இதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது முதல் படி தான். இனி திருநங்கைகளுடன் கலந்து பேசி அவர்களின் விருப்பங்கள் என்ன என்பதை ஆலோசித்து அதையும் நிறைவேற்றுவது பற்றி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News