கதம்பம்

பட்டினி கிடக்கும் திமிங்கிலங்கள்

Published On 2022-08-29 10:43 GMT   |   Update On 2022-08-29 10:43 GMT
  • ஐஸ்லாந்து பகுதியில் கிடைக்கும் க்ரில்மீன்களை உண்ண பூமத்தியரேகை பகுதியில் இருந்து நீலதிமிங்கிலங்கள் ஐஸ்லாந்துக்கு வருகின்றன.
  • நீலதிமிங்கிலங்கள் உலகின் மிகப்பெரும் உயிரினமாகும். அவை மிக எக்ஸ்ட்ரீம் ஆன உண்ணாவிரதத்தை கடைபிடிக்கின்றன.

பெயர்தான் ஐஸ்லாந்து என்றாலும் இங்கே 200-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. உலகம் முழுவதிலும் இருக்கும் எரிமலைக்குழம்பில் 66% இங்கே தான் உள்ளது. எரிமலை வெடிப்பில் ஏராளமான மினரல்கள் இதன் மண்ணில் சேர்ந்துள்ளன.

ஐஸ்லாந்து துருவபகுதியில் இருந்தாலும் அதை சுற்றி வெப்ப நீரோட்டம் இருப்பதால் அதன் கடல் உறைவதில்லை. நீரோட்டம் காரணமாக ஏராளமான மினரல்கள் அதன் பாறைகளில் அடித்து கொண்டு வரப்படுவதால் அதை உண்ண ஏராளமான அளவில் க்ரில் (Krill) எனப்படும் மீன்கள் கூடுகின்றன.

ஏராளம் என்றால் எந்த அளவு?

உலகில் உள்ள மனிதர்கள் அனைவர் எடைக்கும் சமமான அளவு எடையுள்ள க்ரில்மீன்கள்.

இத்தனை சத்தான ஊட்டசத்து கிடைக்கையில் அதை உண்ண உயிரினங்கள் வராமலா இருக்கும்?

ஐஸ்லாந்து பகுதியில் கிடைக்கும் க்ரில்மீன்களை உண்ண பூமத்தியரேகை பகுதியில் இருந்து நீலதிமிங்கிலங்கள் ஐஸ்லாந்துக்கு வருகின்றன.

நீலதிமிங்கிலங்கள் உலகின் மிகப்பெரும் உயிரினமாகும். அவை மிக எக்ஸ்ட்ரீம் ஆன உண்ணாவிரதத்தை கடைபிடிக்கின்றன.

க்ரில் மீன்கள் கிடைக்கும் சீசனில் அவற்றை உண்டு கொழுக்கின்றன. அதன்பின் பூமத்தியரேகை பகுதிக்கு திரும்பி மாதகணக்கில் அடுத்த க்ரில்மீன் சீசன் வரும்வரை முழுபட்டினியாக உள்ளன.

நீலதிமிங்கிலங்கள் எடை 200 டன். அதன் நாக்கின் எடை ஒரு யானையின் எடைக்கு சமம்.

அதன் இதயநாளத்தின் வழியே ஒரு மனிதன் தாராளமாக நீந்தி செல்லும் அளவு இடம் உள்ளது. அதன் இதயத்தின் எடை மட்டும் 1000 கிலோ.

அது பாலூட்டிவகை. அதன் பால் தான் உலகிலேயே அதிக கொழுப்பு நிரம்பிய பாலாகும். அதை மட்டுமே உண்டுவளரும். அதன் குட்டிகள் ஒரு நாளைக்கு 90 கிலோ அளவு எடை அதிகரித்து வளரும்.

- நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News