கதம்பம்

முதல் பெண் மருத்துவர்

Published On 2022-06-29 11:08 GMT   |   Update On 2022-06-29 11:08 GMT
  • முத்துலட்சுமி ரெட்டியோடு படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர்கள் இந்த ஒரு பெண்ணால் கல்லூரியில் படிக்கும் அனைத்து ஆண்களின் மனதும் சலனப்படுகிறது.
  • அதனால் இவளை இந்த கல்லூரியை விட்டு துரத்த வேண்டும் என்று டீனிடம் முறையிட்டார்கள். அதற்கு அந்த டீன், பெற்றோர்களிடம் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

இந்தியாவின் முதல் பெண் ஆங்கில மருத்துவர்... இந்தியா என்று அல்ல, இங்கலாந்தில் கூட இந்த பெண்ணிற்கு முன்னர் எந்த பெண்ணும் மருத்துவ படிப்பு படிக்கவில்லை. அந்த பெண்மணி தான் முத்துலட்சுமி ரெட்டி. சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இவர் மருத்துவ படிப்பை முடித்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனார்.

ஆண்கள் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்ட முதல் ஒரே பெண் மருத்துவர் இவர் தான். கல்லூரியில் இவரை தனியாக ஒரு இடத்தில் அமர வைப்பார்கள். இவரை யாரும் பார்க்க முடியாத படி ஒரு திரை இருக்கும். காரணம், வடிவேல் ஸ்லாங்ல சொல்லனம்னா... பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில பக்கத்தில் வைத்தால் என்ன ஆகும்?. அதனால இவங்களை தனியா ஓரம் கட்டினாங்களாம்.

இந்தியாவில் மருத்துவ படிப்பை முடித்து மருத்துவ மேல் படிப்புக்கு இவர் இங்கிலாந்தில் உள்ள ராயல் லண்டன் ஸ்கூல் ஆப் மெடிசின் கல்லூரியில் விண்ணப்பித்தார். சிகப்பு கம்பளம் விரித்து முத்து லட்சுமி ரெட்டியை வரவேற்றது. ஆனால் அங்கும் அதே கதை தான். ஆணாதிக்கத்தில் இந்தியா என்ன, இங்கிலாந்தென்ன.. எல்லாம் ஒன்னு தான்அந்த காலத்தில்.

இங்கலாந்தில் முத்து லட்சுமி ரெட்டி படித்துக் கொண்டு இருந்த பொழுது அவர் உடன் படித்த அனைவருமே ஆண்கள். அன்று அந்த காலேஜை கூட்டி, பெருக்கும் வேலையையும் ஆண்களே செய்தார்கள்.

முத்துலட்சுமி ரெட்டியோடு படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர்கள் இந்த ஒரு பெண்ணால் கல்லூரியில் படிக்கும் அனைத்து ஆண்களின் மனதும் சலனப்படுகிறது. அதனால் இவளை இந்த கல்லூரியை விட்டு துரத்த வேண்டும் என்று டீனிடம் முறையிட்டார்கள். அதற்கு அந்த டீன், பெற்றோர்களிடம் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

அப்படியா, உங்கள் மகன்கள் யாரும் இங்கே வர வேண்டாம்.. வீட்டிலேயே இருக்கட்டும். இந்த ஒரு பெண்ணை பார்த்தே உங்கள் மகன்களின் மனம் சலனப்படுகிறது என்றால், நாளை உங்கள் மகன்கள் மருத்துவர் ஆனால் பல பெண்களின் நாடி பிடித்து மருத்துவம் பார்க்க வேண்டி இருக்கும். இத்தகைய சலன புத்தி உடைய ஆண்களுக்கு மருத்துவர் ஆகும் எந்தவித தகுதியும் இல்லை என்றார். இப்படி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு சாதனைப்படைத்தவர் முத்துலெட்சுமி ரெட்டி.

இவர் வெறும் மருத்துவர் மட்டும் அல்ல, சென்னையின் முதல் பெண் துணை மேயர். சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டவர். அடையார் கேன்சர் இன்ஸ்ட்டிடியூட் இவர் நிறுவியது தான். தேவதாசி முறையை ஒழித்தவர் முத்து லட்சுமி அம்மையார் தான். தமிழ் மொழி, தமிழிசையின் வளர்ச்சியிலும் இவர் மிகப்பெரிய தொண்டு ஆற்றியுள்ளார்.

Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்